பெங்களூரு சிறையில் சுதாகரனுக்கு சலுகை மறுப்பு – சசி, இளவரசிக்கு மட்டுமே சலுகைகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சசிகலாவிற்கும், இளவரசிக்கும் மட்டும் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக கூறி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை, தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து பரப்பன
அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, சசிகலாவிற்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுதாகரனுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிறைக்கு வரும் முன்பே சசிகலா சில சலுகைகளை கேட்டிருந்தார். ஒரு உதவியாளர், ஏசி தனி அறை, சுடுதண்ணீர் வசதி, வீட்டு உணவு, வாக்கிங் செல்ல வசதி,குடிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும் என்றும் கேட்டிருந்தார் சசிகலா. இதனை ஏற்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
முதல்வகுப்பு கேட்ட சசிகலா
இதனையடுத்து சதாரண அறையில் அடைக்கப்பட்டார் சசிகலா, வருமான வரி ஆவணங்களை தாக்கல் செய்த சசிகலா தனக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டிருந்தார். தற்போது சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசிக்கு டிவி, நாளிதழ் மற்றும் கட்டில் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு உணவு
வீட்டு உணவு வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை இதுவரை பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. புளியோதரை, கேழ்வரகு களி, சப்பாத்தி சாம்பார் ஆகியவைகளை சசிகலா சாப்பிட்டு வருகிறார்.
சிறையில் சலுகை
சிறையில் பி2 பிரிவில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று வேறு அறைக்கு சென்று தொலைக்காட்சி பார்த்தனர். அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்வதற்காக சில சலுகைகளை கேட்டிருந்தார் சசிகலா.
நிர்வாகம் சம்மதம்
இதனையடுத்து சசிகலா, இளவரசிக்கு தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி மற்றும் செய்தித்தாள் உள்ளிட்டவைகளை சிறை நிர்வாகம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதாகரனுக்கு மறுப்பு
அதேநேரம் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனுக்கு இதுவரை எந்த வசதிகளும் செய்துத் தரப்படவில்லை என பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா போலவே சுதாகரனும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் சுதாகரன்.
